அன்று தமிழர்கள் ஆட்சி செய்த மாலத்தீவு பற்றி வெளி வந்த சுவாரஸ்ய தகவல்கள்..!

இந்தியாவுக்கு தெற்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு இன்று அரசியல் சுழலில் சிக்கி தவிக்கிறது.

மாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த பகுதி ஆகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம் கொண்ட நாடாக மாலத்தீவு திகழ்கிறது. அங்கு மலையாளம் முக்கிய மொழியாகவும் இருக்கிறது.

மாலத்தீவு மொத்தம் 26 தீவு கூட்டத்தை கொண்டது. அதில், சுமார் 1192 குட்டி தீவுகள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்கள் மாலை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளன. எனவே, அது மாலை தீவு என அழைக்கப்பட்டு பின்னர் மாலத்தீவாக பெயர் மாறியது. இத்தனை தீவுகள் இருந்தாலும் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.

மாலத்தீவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்து 27 ஆயிரத்து 756. இதன் தலைநகரமாக மாலி உள்ளது. இது, 5.8 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேர் வசிக்கிறார்கள். உலகிலேயே மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்களில் ஒன்றாகவும் மாலி நகரம் உள்ளது.

மாலி தீவில் கி.மு. 200-ம் ஆண்டிலேயே மக்கள் வசித்ததற்கான தடயங்கள் உள்ளன. கி.மு. 2000-ம் ஆண்டுக்கு முன்பில் இருந்தே இங்கு மக்கள் வசித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் கேரளா, தமிழகம் பகுதியை சேர்ந்த மக்கள் பெருமளவில் இந்த தீவுக்கு சென்று குடியேறி இருக்கிறார்கள்.

பின்னர், இலங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து அதன் மூலம் கலப்பின சந்ததியினரும் உருவாகி உள்ளனர்.

ஆரம்பத்தில் கிராவரு என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தி இருக்கிறார்கள். பின்னர் சோழர் காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளது. இதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். சிங்கள இளவரசன் கொயிமலா நீண்ட காலமாக ஆட்சி செய்துள்ளான். அப்போதெல்லாம் அங்கு புத்த மதம் தழைத்தோங்கி இருந்துள்ளது.

இடையில் 1153-ம் ஆண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். அதை தொடர்ந்து சுல்தான் ஆட்சி முறை வந்தது. 1558-ல் போர்சுக்கீசியர்கள் மாலத்தீவை கைப்பற்றி கொண்டனர். 1654-ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள்.

1887-ல் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் மாலத்தீவு வந்தது. 1965-ல் மாலத்தீவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சுல்தான் ஆட்சி முறை வந்து 1968-ம் ஆண்டுவரை நீடித்தது.

பின்னர், மாலத்தீவு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. முதல் அதிபராக இப்ராகிம் நசீர் தேர்வு செய்யப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்துல் கயூம் அதிபராக தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார்.

அதன் பிறகு முகமது நசீத், முகமது வாகித் உசேன், அப்துல்லா யாமீன் ஆகியோர் அதிபராக பதவி ஏற்றனர். தற்போது அப்துல்லா யாமீன் அதிபராக இருக்கிறார். இந்த நாட்டின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனை பதப்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி சம்பாதித்து வருகின்றனர்.

மேலும், உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் மாலத்தீவு திகழ்கிறது. சுற்றுலாவின் மூலம் ஏராளமான வருமானம் கிடைக்கிறது. மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியாக திவெயி மொழி உள்ளது. இது சிங்கள மொழியை ஒட்டியே அமைந்துள்ளது.

1988-ல் இலங்கை தமிழ் போராளி குழு ஒன்று மாலத்தீவை கைப்பற்றி கொண்டது. அப்போது, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி சில மணி நேரங்களில் மாலத்தீவை மீட்டு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad