குளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க.. சில எளிய வழிமுறைகள்..!

இந்த ஆண்டும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது குளிர். `விஷப் பனி மாதிரியில்ல இருக்கு… காலையில எட்டு மணி வரைக்கும் வீட்டை விட்டு வெளியவே வர முடியலை’ என்கிற குரல்களைக் கேட்க முடிகிறது.

`இந்தத் தட்பவெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால், நோய்க் கிருமிகள் அதிக வீரியம் பெற்று, குறிப்பாக ‘வைரஸ்’ நோய்க்கிருமிகள் அதிகம் உற்பத்தியாகும். ஆக, குளிர்காலம் கிருமிகளுக்குக் கொண்டாட்டமான காலம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

பனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, தொண்டைக்கட்டுதல், ஆஸ்துமா, காதடைப்பு, சோர்வு, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, அலர்ஜி போன்ற பல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத் தொடங்கிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களைத் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, ‘பனிக்காலம்’ என்பதே படு அவஸ்தையான காலம்.

“உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்க விடாமல் கடந்து விடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் குளிர்காலத்தில் தாக்கக் கூடிய நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும்”

குளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க… சில எளிய வழிமுறைகள்

நாமிருக்கும் இடம் நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும். பனிக்காலத்தில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளலாம். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம்.

ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதோ, ஃபாஸ்புட் உணவுகளை உண்பதையோ தவிர்க்கலாம். ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.

ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை நேரத்துக்குப் பிறகு வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யாமலிருக்கலாம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சிறுநீர் கழித்த பின்னர் கை,கால்களைச் சுத்தப்படுத் திக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். சுகாதாரமற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.

பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும் போது காதுக்குப் பஞ்சு வைத்துக்கொள்ளலாம் அல்லது மப்ளர் போன்றவற்றால் காதுகளை மறைத்துக்கொள்ளலாம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad