சாதனை படைத்த முல்லைத்தீவு வைத்தியர்கள்!


முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12ஆம் திகதி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் தனி எலும்பு முறிவு பிரிவு இல்லாத போதும், பல வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்ற நிலையிலும் வைத்தியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையால் முதல் முறையாக வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் சந்தருவன் பண்டார ஹெராத் மற்றும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் உட்பட யாழ். போதனா வைத்தியசாலை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரலிங்கம் சுதர்ஷன் தலைமையிலான குழு உறுப்பினர்கள் இந்த சாதனையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

மூட்டு வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகளை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்திய குழுவினர் இந்த சாதனைக்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சகங்களின் ஆதரவுக்கும், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் ஆதரவுக்கும் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இந்த அறுவை சிகிச்சை வள குறைபாடுகளுடன் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு தனி சத்திரசிகிச்சை கூடம் இல்லாத பொதுவான கிருமிநீக்கம் செய்யப்பட்ட பொது சத்திரசிகிச்சை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மாவட்ட பொது மருத்துவமனையாக இருப்பதும் மற்றும் முழு முல்லைத்தீவு மாவட்டத்திற்குமான கவனிப்பை வழங்குவதுமான இவ் வைத்தியசாலையில் ஒரு நிலையான எலும்பு முறிவு சிகிச்சையை தொடர்சியாக வழங்க வேண்டும் என்றும் தற்போது வரை அது இல்லாதிருப்பது பெரும் குறைபாடாகும் எனவும் தெரிவிக்கும் வைத்தியசாலை நிர்வாகம் நாட்டில் இது வரை நிரந்தர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத ஒரேயொரு மாவட்ட வைத்தியசாலை முல்லைத்தீவு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad