நகைகளை திருடி புதிதாக ஒரு நகை கடையே திறந்த ஊழியர்!

 




சென்னையில் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் 25 லட்சம் மதிப்புடைய நகைகளை சிறுக சிறுக திருடி, புதிதாக ஒரு நகை கடையையே தொடங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அடுத்துள்ள நம்மாழ்வார் பேட்டை ஒத்தவாடை தெருவில் ரஞ்சித்குமார் மற்றும் அவருடைய சகோதரர்கள் இணைந்து சுகன் ராஜ்மேத்தா கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடையை நடத்தி வருகின்றனர்.

இவர்களது தந்தை காலத்தில் இருந்து சுமார் 40 வருடமாக இயங்கி வரும் இந்த நகை கடையில் கடந்த 15 ஆண்டுகளாக வீரேந்தர் என்ற ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஊழியராக இருந்து வந்துள்ளார்.

நகைக்கடை உரிமையாளர் ரஞ்சித் குமாரின் குடும்ப உறுப்பினர் போன்று வீரேந்தரும் இருந்து வந்ததாகவும், அவர் மீது நம்பிக்கை வைத்து கடையின் தங்க நகை லாக்கர் சாவியை ஒப்படைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நகைக்கடையில் பொதுமக்கள் அடகு வைக்கும் நகைகள் குறைவது தெரிய வந்ததால், வீரேந்தர் மீது நகைக்கடை உரிமையாளர் ரஞ்சித்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவரை கையும் களவுமாக பிடிப்பதற்கு புதிதாக வாங்கி வந்த நகைகளை, அடகு பிடிக்கபட்ட நகைகள் என கூறி வீரேந்தரிடம் கொடுத்து லாக்கரில் வைக்க சொல்லியுள்ளார்.

சில நாட்கள் கழித்து அவற்றை பார்த்த போது அதில் ஒரு தங்க செயின் காணாமல் போயுள்ளது.

இதையடுத்து ரஞ்சித் குமார் அவருடைய சகோதரர்களும் ஊழியர் வீரேந்தரை பிடித்து விசாரித்ததில் நகையை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சிறுக சிறுக கடையில் இருந்து நகைகளை திருடியதையும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை அவர் திருடி உள்ளதாகவும், அவற்றை கொண்டு வீரேந்தர் தனது சகோதரர் ரத்தன் பட்டேல் என்பவரை வைத்து சென்னை கொளத்தூரில் பாலாஜி கோல்ட் ஹவுஸ் என்ற ஒரு நகை கடையை தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரஞ்சித்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

குடும்ப உறுப்பினராக பழகிய நபர் இவ்வாறு செய்து விட்டாரே என வருந்திய ரஞ்சித் குமார் அவர் குடும்பத்தினர் முதலில் புகார் எதுவும் கொடுக்காமல் எடுத்த நகைகளை அதற்கான தொகையை திருப்பி செலுத்தி விடுமாறு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் மூலம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் நகைகளை திருப்பித் தராமல் இருந்துவந்த விரேந்தர் தொடர்ந்து திருடப்பட்ட நகைகள் குறித்து ரஞ்சித்குமார் கேட்டு வந்ததால் அடியாட்களை அழைத்து வந்து மிரட்டியதாகவும், மேலும் 15 லட்சம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நகை கடை உரிமையாளர் ரஞ்சித் குமார் இன்று அயனாவரம் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தலைமைச் செயலக காலனி போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad