குடித்துவிட்டு அட்டகாசம் செய்த தந்தையை ஆள் வைத்து வெட்டிக் கொன்ற மகள்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர். ரீத்தாபுரம் பேரூர் திமுக செயலாளரான இவர், கடந்த திங்கள் அன்று வீட்டருகே மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை தொடர்பான போலீசாரின் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தனது தந்தை குடிபோதையில் அடிக்கடி வீட்டில் வந்து தங்களை துன்புறுத்தி வந்ததால் இதற்கு முடிவு கட்ட மூத்த மகள் எம்.எட் பட்டதாரியான தீபாவதி எண்ணினார். அதற்காக திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த நண்பரான கோபு (18) என்ற இளைஞனிடம் தந்தையை கொலை செய்யும் திட்டம் குறித்து கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து கோபு தனக்குத் தெரிந்த நண்பரான ஸ்ரீ முகுந்தன் என்ற வாலிபரை தொடர்புகொண்டு விபரத்தைக் கூறி, தீபாவதிக்கு அறிமுகம் செய்து வைத்து, கொலை திட்டத்தை கூறினார்.
அதனடிப்படையில் கொலைக்கான கூலியாக ஒரு லட்ச ரூபாய் கேட்ட ஸ்ரீ முகுந்தன் பேரம் பேசி 60 ஆயிரம் ரூபாய்க்கு கொலை செய்யலாம் என ஒப்புக் கொண்டதோடு 10,000 ரூபாய் முன்பணமாக பெற்றுக் கொண்டார். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தீபாவதி அளித்த திட்டத்தின்படி, குமார் சங்கரை அவரது வீட்டருகே ஸ்ரீ முகுந்தன் வெட்டி படுகொலை செய்துள்ளார். இவ்வழக்கில் தீபாவதி, கோபு, ஸ்ரீ முகுந்தன், ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியையும் பிள்ளைகளையும் குடிபோதையில் வந்து தொடர்ந்து துன்புறுத்தியதால் தந்தையான திமுக பிரமுகரை மகளே திட்டம்போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad