யாழ் மாவட்டத்தில் கடும் மழையுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் சுழிபுரம் பகுதியில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதுடன் மின்கம்பமும் முறிந்ததால் மின் தடையும் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து செயற்பட்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர், வீதிக்கு குறுக்காக முறிந்து விழுந்த மரத்தை வெட்டி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
அதேவேளை சீரற்ற காலநிலையால் அராலி பகுதியில் 5 வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்துள்ளது. அத்துடன் அராலி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணியிலும் அந்த குழுவினர் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பொதுஇடம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தெரிவித்தார்.
வடக்கு - கிழக்கில் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
