வாடகைக்கு எடுத்த காரை நூதனமான முறையில் யாழ்ப்பாணத்தில் அடகு வைத்து, பல இலட்சம் ரூபாய்களை மோசடி செய்த நபரை காவற்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நீர்கொழும்பில் உள்ள வாகன வாடகை நிறுவனம் ஒன்றில் நபரொருவர் சொகுசு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். சில நாட்கள் காரைப் பயன்படுத்திய அந்த நபர், நிறுவனத்தினர் காரைக் கண்காணிக்க முடியாதவாறு அதன் GPS கருவியைச் செயலிழக்கச் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தலைமறைவான நபர், அந்த காரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்த ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தான் அடகு பிடித்த கார் நீர்கொழும்பில் திருடப்பட்ட (வாடகைக்கு எடுத்து மோசடி செய்யப்பட்ட) வாகனம் என்பதையும், இது தொடர்பாக காவற்துறையினர் தேடி வருவதையும் அறிந்த அந்த நபர், காவற்துறை விசாரணைக்கு அஞ்சி காரை யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் வீதியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.
அநாதரவாக நின்ற காரை மீட்ட யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதேநேரம் நீர்கொழும்பு காவற்துறையினர் காரை அடையாளம் கண்டு யாழ்ப்பாணம் வந்து அதனை மீட்டுச் சென்றுள்ளனர்.
தற்போது தலைமறைவாகியுள்ள அந்த “கில்லாடி” மோசடி நபரை கைது செய்ய காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
