14 வயது சிறுவன் சஞ்சீவன் கொலை!! நடந்தது என்ன?

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்சீவன் என்ற சிறுவன் காயங்களுடன் இன்று (06.07) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டுக்கு பின்பகுதியில் தலை மற்றும் முகத்தில் அடி காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் குறித்த சிறுவன் சடலமாக காணப்பட்டதுடன் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பமானது. நடுத்தர வசதிகளுடன் வசித்து வருகின்ற குடும்பத்தில் உதயச்சந்திரன் சஞ்சீவன் கடைசி பிள்ளை.

இவருக்கு மூன்று அக்கா, ஓர் அண்ணா என நான்கு சகோதர்கள் உள்ளனர். இவர்களது வளவினுள் வர்த்தக நிலைய கட்டிடம் மற்றும் வீடு என்பன அமைந்துள்ளதுடன், பெரிய வீடு ஒன்றிற்கான நிர்மாணப்பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்குவதற்கு போதிய வசதிகள் இன்மையினால் குறித்த சிறுவனும், அவரின் அண்ணாவும் அவர்களின் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய கட்டிடடத்தில் இரவு நேரத்தில் தங்குவது வழமை.

நேற்றையதினம் (05.07) இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இன்று (06.07) காலை தாயார் வைத்தியசாலைக்கும், தந்தை வேலைக்கும் சென்றிருந்த நிலையில் சிறுவனை காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடிய சமயத்தில் இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின்பகுதியில் தலை தரையினை நோக்கியவாறு (பின்பக்கமாக) உடல் காணப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சகோதரிகள், சகோதரனுக்கு நடந்ததை தெரிவித்ததையடுத்து அவ்விடத்திற்கு சென்ற சகோதரன் சடலத்தினை திருப்பி பார்வையிட்ட போது முகத்தில் காயங்களுடனும், கழுத்தில் வெட்டுக்காயங்களுடனும் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளார். அத்துடன் சிறிய பூங்கன்று ஒன்றில் துணி ஒன்றும் கட்டப்பட்டிருந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன், தடவியல் பொலிஸாரின் உதவியினையும் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை பார்வையிட்டதுடன், சிறுவனின் சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் விசாரணைளையும் முன்னெடுத்திருந்தார். எனினும் இதுவரையில் சிறுவனின் மரணம் தொடர்பில் மர்மமான நிலமை நீடித்துள்ளதுடன், பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார் பிரேத பரிசோதனை அறிக்கையினைப் பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad