எரித்து கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுமி. இருவர் கைது.

திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சாமினி என்ற 17 வயது மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்திருந்தனர்.

இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று (14) எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை 27ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இக்கொலைச் சம்பவம் 10.04.2021 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எரியூட்டப்பட்ட மாணவி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 25.04.2021 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எரிக்கப்பட்ட போது, மாணவி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு மூன்றுமாத கர்பிணியாக இருந்துள்ளார்.

குறித்த மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலை பச்சைநிற கிண்ணத்தில் எடுத்து உருத்திரமூர்த்தி அருள் என்பவர் ஊற்ற, தேவராஜா கபில்ராஜ் தீ வைத்ததாகவும், இக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இம் மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தார். இவருடைய இழப்பு பாடசாலைக்கும் பெரியதொரு இழப்பாக கருதப்படுகின்றது.

Top Post Ad

Below Post Ad