யாழில் இரு குடும்ப மோதல். சினிமா பாணியில் வாள்வெட்டு.

வடமராட்சி, துன்னாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வாகனத்தினால் மோதி தள்ளி, வாளால் வெட்டி காயப்படுத்திய பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரு தரப்புக்கிடையில் சில காலமாக நடந்து வரும் வாள்வெட்டு மோதலின் தொடர்ச்சியாக பழிவாங்குவதற்காக இநத வாள்வெட்டு சம்பவம் நடந்துள்ளது.

துன்னாலை, வேம்படி சந்திக்கு அண்மையாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரை, மகேந்திரா வாகனத்தில் வந்தவர்கள் பின்பக்கமாக மோதித்தள்ளி, நிலத்தில் விழுந்த ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

வெட்டுக்காயங்களுக்குள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ரௌடிகள் வந்த மகேந்திரா வாகனத்தை சற்று தள்ளி பற்றைக்காட்டுக்குள் மறைத்து விட்டு தப்பியோடியுள்ளனர்.

துன்னாலை, குடவத்தை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு, மோதலாக மாறி, நீண்டகாலமாக பரஸ்பரம் வாள்வெட்டு தாக்குதல்கள் நடந்து வருகிறது.

தற்போது, வாள்வெட்டுக்கு இலக்கானவருக்கு கடந்த வருடம் எதிர்தரப்பினர் வாளால் வெட்டி காயப்படுத்தியிருந்தனர். இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் பிணையில் விடுதலையான பின்னர், கடந்த நவம்பர் மாதம் பதிலடியாக மற்றொரு வாள்வெட்டு சம்பவம் நடந்தது.

அப்போது வாள்வெட்டுக்கு இலக்கானவர் (நேற்றும் வெட்டுக்கு இலக்கானவர்) நண்பர்கள் சிலருடன் சென்று, ஆலயமொன்றுக்குள் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனை சரமாரியாக வெட்டித்தள்ளினர். தாக்குதலில் காயமடைந்தவரே முதலில் தாக்குதல் நடத்தியவர்.

அவர் மந்தியை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சில மணி நேரங்களில், அவரது கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் பெருந்தொகையானவர்கள் அவசர சிகிச்சை பிரிவின் முன்பாக குழுமி விட்டனர். அங்கு நோயாளியுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் மாத்திரமே நிற்கலாமென மந்திகை வைத்தியசாலை பாதுகாவலர்கள் ஏனையவர்களுடன் கறாராக நின்றாலும், அன்று கப்சிப் என இருந்து விட்டனர்.

அங்கு குழுமிய யுவதிகளே “வெட்டினவனை விடக்கூடாது“ என இளைஞர்களை பகிரங்கமாக உசுப்பேற்றிக் கொண்டிருந்ததை செய்தியாளர்கள் அவதானித்திருந்தனர்.

இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொர்புடைய பிரதான நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவரின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக இலக்கு வைக்கப்பட்டு, பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, இலக்கு வைக்கப்பட்ட குடும்பமே அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறி சென்றது.

இந்த குடும்பத்தை சேர்ந்த- பொலிசாரால் கைது செய்யப்பட்ட நபர்- பிணையில் விடுதலையான பின்னர், நேற்று இரவு மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மகேந்திரா வாகனத்தில் வந்த குழுவொன்று அவர்களை மோதித்தள்ளி வாளால் வெட்டியுள்ளது.

வாள்வெட்டுக்காரர்கள் இன்னும் கைது செய்யப்படாத போதும், பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்த வாள்வெட்டு இதுவென பொலிசார் ஊகிக்கிறார்கள்.

இதேவேளை, இந்த தொடர் வாள்வெட்டு நீடிப்பதற்கு நெல்லியடி பொலிசாரின் அசமந்தமும் ஒரு காரணமென பிரதேச மக்கள் குறறம்சாட்டுகிறார்கள். வாள்வெட்டுக்காரர்களை பொலிசார் கூண்டோடு கைது செய்ய வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad