வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று 16ஆம் திகதி நடைபெற்றது. வேலணைப் பிரதேச சபையால் வாகன திருத்தங்களுக்கும் அதனை ஒத்த தேவைகளுக்குமாக செலவிடப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில் மக்களின் நலன்களுக்கு செலவிடப்படும் நிதி மிகவும் குறைவாகவே இருக்கின்றது என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் அந்த அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வேலணை பிரதேச சபை வருமானம் குறைந்த ஒரு சபையாகும். இந்நிலையில் மிக நெருக்கடிகளை சந்தித்தே நிதி வருவாய்கள் திரட்டப்படுகின்றன. அந்த நிதியானது மக்களின் தேவைகளை விட வாகனங்களின் நலன்களுக்காக செலவிடப்படுகின்றது.
குறிப்பாக கடந்த மாதத்தில் கூட 10 இலட்சத்துக்கும் அதிகமான நிதி திருத்த வேலைகளுக்காக செலவிடப்படுள்ளது. இந்நிலை இனிவரும் காலங்களில் தொடரக்கூடாது, அது மக்களின் தேவைகளுக்கே சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.