பேரனைக் கொன்று நேர்மையை நிலை நாட்டிய சவுதி மன்னர்…!! சுயநல உலகில் இப்படி ஒரு மன்னனா…??

பசுவின் கன்றை கொன்ற மகனைத் தேர்க் காலில் தலையை இடறச் செய்து, நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன். தற்காலத்திலும் அப்படி ஒரு சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. வளைகுடா நாடான சவுதியில் என்ன குற்றம் செய்தாலும் இஸ்லாமிய முறைப்படித்தான் தண்டனை வழங்கப்படும். கொலைக்குப் பதில் கொலை, கையை வெட்டினால் பதிலுக்கு கை வெட்டப்படும்.

தற்போது அரேபிய அரசராக இருப்பவர் கிங் சல்மான். சவுதியில் தவித்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை செட்டில் செய்ய உத்தரவிட்டவர். தீவிரவாதச் செயல்களால் பாதிக்கப்படும் அண்டை நாடுகளுக்கும் உதவி வருபவர். வளைகுடா அரசர்களில் கிங் சல்மான் சற்று வித்தியாசமான மனிதநேய மிக்க அரசராகத்தான் இதுவரைத் தெரிந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட தனது பேரனின் தலையை துண்டிக்க உத்தரவிட்டு, உலக மக்களை வியப்படைய வைத்துள்ளார்.

இத்தனை நாளும் மனித நேயமிக்க மனிதராக தெரிந்த கிங் சல்மானின் போர்க்குணத்தைக் கண்டு இப்போது சவுதி மக்களே மிரண்டு போயுள்ளனர்.

கடந்த 1935-ம் ஆண்டு பிறந்த கிங் சல்மான் தனது 19-வது வயதில் முதன்முறையாக நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். 2015-ம் ஆண்டு வரை இளவரசராகத்தான் சல்மான் இருந்தார். சல்மானின் சகோதரர் கிங் அப்துல்லா மரணமடைந்ததையடுத்து, தனது 79-வது வயதில் சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் பதவியேற்றார்.

பதவியேற்றபோது, ”திருடியது என் மகளாக இருந்தாலும் கையை வெட்டுவேன் என்றார்கள் நபிகள். அதுபோல் குர்ஆனில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதே வழியிலானத் தண்டனைதான் எனது ஆட்சியிலும் தரப்படும். எனது குடும்பத்தினரால் பொதுமக்களுக்கு தொல்லை நேர்ந்தால் சட்டத்தில் என்ன சொல்லப்படுகிறதோ அதே தண்டனைதான் கிடைக்கும்” என்று அறிவித்திருந்தார்.

கிங் அப்துல்லாவின் நேர்மையை சோதிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு சவுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் கபீர். நண்பருடன் ஏற்பட்டத் தகராறில் அவரைச் சுட்டுக் கொன்று விட்டார் கபீர். இதனைத் தொடர்ந்து கபீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதி விசாரணை நடந்தது.

கிங் சல்மான் ஆட்சியில் நீதி விசாரணையில் எந்த குறுக்கீடும் ஏற்படவில்லை. குற்றத்துக்கான ஆதரங்கள் திரட்டப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொலைக் குற்றத்துக்கு இஸ்லாத்தில் பதிலுக்கு கொலைதான் தண்டனை என சொல்லப்பட்டுள்ளதால், அதே வழித் தண்டனை இளவரசர் கபீருக்கு வழங்கப்பட்டது.

ஆனாலும், குற்றவாளியை மன்னிக்கும் இறுதி அதிகாரம் சவுதி மன்னருக்கு உண்டு. உறவினர்கள் பலர் மன்னரிடம் முறையிட்டு, கபீரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் மன்னரிடம் எடுபடவில்லை.

மன்னர் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. ‘எனது பேரனாக இருந்தாலும் அல்லாஹ்வின் சட்டத்தில் சமரசம் செய்து கொள்ள எந்த இடமும் இல்லை” எனக் கூறி தண்டனையை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ரியாத்தில் இளவரசர் கபீரின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன் கடந்த 1975-ம் ஆண்டு மன்னர் ஃபைசலை கொலை செய்த குற்றத்துக்காக இளவரசர் ஃபைசல் பின் முசைத் பொது இடத்தில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இளவரசர் பைசலின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்க 10 ஆயிரம் பேர் கூடியிருந்தததாகவும் தலை துண்டிக்கப்பட்டதும் ”காட் இஸ் கிரேட்… ஜஸ்டிஸ் டன்” என முழக்கமிட்டதாக நியூயார்க் டைம்ஸ் அப்போது செய்தி வெளியிட்டிருந்தது. அதனால், அதே பாணியில்தான் இளவரசர் கபீரின் தலையும் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக எந்த புகைப்படமும் சவுதி அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.

இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பைசல் பின் முசைத் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரையே கொலை செய்திருந்தார். அதனால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது பெரிய விஷயமே இல்லை. ஆனால், கபீர் கொலை செய்தவர் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர் இல்லை. ஆனாலும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனையில் வேறுபாடு இருக்காது என்பதை சவுதி மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் கிங் சல்மான்.

கடந்த 1932-ம் ஆண்டும் 1953-ம் ஆண்டு வரை சவுதி அரேபியா மன்னராக இருந்தவர் அப்துல்லாஸிஸ். இவர்தான் சவுதியின் தொழில் வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் வித்திட்டவர். கபீர் கிங் சல்மானுக்கு நேரடி பேரன் இல்லையென்றாலும் மறைந்த மன்னர் அப்துல்லாஸிசின் வழியில் தூரத்து உறவாகிறார்.

நீதியை நிலை நாட்டுவதில் தான் ஒரு ‘கிங்’ என நிரூபித்து விட்டார் கிங் சல்மான்!



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad