பண்டைய காலத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகள்.

ஒரு பெண் கருவறையில் பிறக்கும் தருணத்திலிருந்து கல்லறையில் உறங்கும் வரை எத்தனை இன்னல்களை கடக்க வேண்டியுள்ளது. பண்டைய காலந்தொட்டே நம் பெண்கள் ஆண்களின் அடிமையாக வாழ்ந்துள்ளனர் என்பது வேதனைக்குரிய ஒன்றே. மகளிர் தினம் என்று ஒன்று கொண்டாடுகிறோம் ஆனால் உண்மையில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? ஆளில்லா தெருவில் நகைகளுடன் பெண் இரவில் நடந்து வந்தால் அது பெண் சுதந்திரமா? அன்று ஆவிகளுக்கு பயந்த பெண்கள் போய் இன்று ஆண்களுக்கு பயப்படும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர் இந்த பெண் சுதந்திரம்  தேவையா? அன்றைய காலந்தொட்டு இன்றைய காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் சொல்லி தீருமா? பெண்களின் சுதந்திர வரலாறு பற்றி நாம் பல்வேறு விதமான கருத்துக்களை பல்வேறு அடிப்படையிலும் நாம் காண முடிகின்றது.  மனிதர்களாய் படைக்கப்பட்ட வேதங்களின் ஆரம்பக்காலத்தில் பெண்ணை மிக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட்ட தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான பல முற்போக்கு செயல்களும் நடந்துள்ளது என்பது எத்தனை வேதனை அளிக்கும் செயலாக உள்ளது. எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்றளவும் பெண்ணை இரண்டாந்தர பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் நிலையும் மாறவில்லை.
மேலாடை அணியத் தடை

ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடுவதற்காக காடுமேடு கடந்து பல தூரங்களுக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. அவர்கள் பலமான விலங்குகளிலிருந்து  தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது. இந்த சூழலில் தான் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் குழந்தை பெற்ற சமயங்களில் அவர்களின் பால் வாடையை வைத்தும் குருதியின் வாடையை வைத்தும் விலங்குகள் மோப்பம் பிடித்து வந்து விடும் என்பதை அறிந்து கொண்ட இவர்கள் பெண்களையும், குழந்தை பெற்ற பெண் களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்தவித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள். ஆனால் இன்றும் மாதவிலக்கான பெண்களை தேடி வரும் தொலைவில் விலங்குகள் இல்லை என்றாலும் இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற எண்ணங்கள் எதுவுமின்றி இன்றும் இதே அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியம் இல்லையே.

சங்ககாலத்து இலக்கியங்கள் பெண்களைப் பலவீனமானவர்கள்வாகவே காட்டுகின்றன. பெண் பெரும்பாலும் அவரது உறுப்பு அழகும், அவள் அணியும் ஆடை, அணிகலனைமும் கொண்டே அழைக்கப்பட்டாள். பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமையும், தொழில் உரிமையும், தனது வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும் உரிமையும் இருந்தன என்பதனை அறிய முடியாத காலகட்டம் தான் அது. பெண்கள் தங்கள் கணவரைத் தாமே தேர்வு செய்யக்கூடிய நிலை பெற்றோரின் முயற்சியால் கணவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்துள்ளது. உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் வசதிபடைத்த குடியினரின் மத்தியில் நிலவி உள்ளது.

இது போன்ற சங்க காலத்தில் தான் பெண்களை போற்றத்தக்கும் வகையில் திருக்குறள் உருவானது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு தருணம். திருவள்ளுவர் காலத்தில் பெண்கள் அரசியலிலோ பொது வாழ்விலோ பங்கு கொண்டதாக தெரியவில்லை. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் வந்த காலத்திலும் பெண்களின் நிலை வருந்தத்தக்க நிலையிலேயே இருந்துள்ளது. இராமாயணத்தில் தசரதனுடைய அந்தப்புரத்தில் அறுபதினாயிரம் பெண்கள் இருந்தனர். இதில் அரசியல் ஒப்புதல் பெற்றவர் மூவர். இராவணனோ மனைவியர் எண்ணிக்கையில் தசரதனையும் மிஞ்சியவன். அசோகவனத்தை சுட்டெரிக்கும் ஆற்றல் பெற்றவளாக சீதை இருப்பினும் இராமன் மனைவி என்ற நிலையில் அடங்கி இருப்பதே சீதைக்கு அழகு என்று காட்டுகிறது இராமாயணம். பாரதம் பெண்ணடிமைத்தனத்தை அதிகமாகவே காட்டுகிறது. கணவன் நினைத்தால் மனைவியை சூதாட்டத்தில் பணயம் வைக்கலாம் என்ற கருத்தும் நிலவியது. சீவகசிந்தாமணி எட்டுபெண்களை மணந்த சீவக மன்னனின் வெற்றிச் சிறப்பைக் காட்டுகிறது. பெரிய புராணத்தில் மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அருள் திறமும் கல்வியாற்றலும் கொண்டவராக காட்டப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நிகழ்ந்த வண்ணமே இருந்துள்ளது பண்டைய காலத்தில். கேரளாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க கூடாது அப்படி மறைக்க வேண்டுமெனில் வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் மன்னர் காலத்தில் நிலவி வந்தது. அங்கு வாழ்ந்த 30வயதுடைய நாங்கிலி என்ற பெண் வரி கட்ட மறுத்து தன் மார்பகத்தை மறைத்து மேலாடை அணிந்தாள். இதனால் வரி விதித்த அரசு நேரில் வந்து கேட்டும் அந்த பெண் தன் இரு மார்பையும் வெட்டி விட்டு இது இருந்தால் தானே வரி இப்போது என்ன செய்வீர்கள் என்று கேட்டு வீர மரணம் அடைந்தாள். இது போன்ற எண்ணற்ற அநீதிகள் பெண்களுக்கு நடந்துள்ளது நம் நாட்டில்.
பெண் விடுதலைக்கான போராட்டம்

ஆண் ஆதிக்கச் சமூகத்தின் போக்கினை எதிர்த்து எழுந்த முதன்மையான பெண் சிலப்பதிகாரத்து ‘கண்ணகி’ யுடையது தான். அதற்கு பின் டாக்டர் அம்பேத்கார், பெரியார் போன்றவர்களும் பெண் விடுதலைக்கு அரும்பாடுப்பட்டார்கள். ஈரோட்டுச் சிங்கம் பெரியார் பெண் விடுதலைக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே அதற்காக அவர் குரல் கொடுத்தார். சீர்திருத்தங்களை தனது வீட்டில் இருந்தே தொடங்கியவர். திருமணமாகி ஒரே மாதத்தில் விதவையான அவரது தங்கையின் 10 வயது மகளுக்கு (கணவன் வயது 13!) மறுமணம் செய்து வைத்தார். அந்நாட்களில் விதவைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. தலையை (குறிப்பாக பிரமணர்கள்) மழித்து கொள்ள வேண்டும்; வெள்ளைச் சேலைத்தான் அணியவேண்டும்; நகை அணியக் கூடாது. ஒரு விதவை படும் துன்பத்தை கண்ணால் பார்த்ததால் விதவை மறுமணத்திற்காக வலிமையாகக் குரல் கொடுத்தார். இன்று அவர் போன்றவரின் போராட்டத்தால் மறுமணம் என்ற ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மேலும் பல மூடநம்பிக்கைகளும்  கூட ஒழிக்கப்பட்டுள்ளது என்று கூறியே ஆகவேண்டிய ஒன்று.
சங்க காலச் சித்திரம் 

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பெண்கள் விடுதலை போராட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் முன்னணியில் இருந்து வந்தனர். அந்த புதிய சமுதாய பிறப்பு வரை இந்த போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து கொண்டு செல்வார்கள். இது தான் வரலாறு நிரூபிக்கிறது. பெண்கள் விடுதலைக்கான போராட்டம் என்பது ஒருவர் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டம். வாழ்க்கை, வாழ்வாதாரம், தாய்மையை நிறைவேற்றும் உரிமையுடன் 21-வது நூற்றாண்டில் ஒருவருக்குத் தேவையான முழு அரசியல், பொருளாதார உரிமைகள் கொண்ட சமுதாயத்தை நிறுவும், பழையனவற்றை அழித்துப் புதுப்பிக்கும் போராட்டத்துடன் நெருக்கமாக இது பிணைந்துள்ளது.

இப்போதுள்ள நம் பெண்கள் பாரதி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் வளர்ந்து வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. பல போராட்டங்களை தாண்டி நம் பெண்கள் இன்று கல்வி கற்கவும் மேலை நாடுகளுக்கு தனியாகவே செல்லவும் பல சாதனைகளும் புரிய முடிகிறது எனில் இதற்கு முன் போராடி பெண் சுதந்திரம் பெற்று தந்த வீரமங்கையருக்கும் மகான்களுக்கும் நாம் எவ்வளவு கடமைப்பட்டுள்ளோம் என்று இந்த தருணம் நமக்கு நினைவூட்டுகிறது. பாரதியும் பாரதிதாசனும் பெண் கல்வி பற்றி பாடிய பாடல்

     “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன். . .
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமையற்றிடுங் காணீர்?
– பாரதி

பெண்கட்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!       – பாரதிதாசன்
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad